கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவான டெய்லர் ராஜா கைது
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவான டெய்லர் ராஜா கைது
58 பேர் உயிரிழந்த கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு பிடிபட்டார்.
கோவை: 1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி டெய்லர் ராஜா கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
1998ல் கோவை நகரில் 14 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் 58 பேர் உயிரிழந்தனர், 231 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அல் உம்மா இயக்க தலைவர் பாஷா உள்ளிட்ட பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய முஜிபுர் ரகுமான் மற்றும் டெய்லர் ராஜா தலைமறைவானனர். சி.பி.சி.ஐ.டி. மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.
சமீபத்தில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், டெய்லர் ராஜா கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் வியாபாரியாக வாழ்ந்து வருவது தெரியவந்தது. காய்கறி மார்க்கெட்டில் வியாபாரி போல வேலை பார்த்து, அடையாளங்களை மாற்றி வாழ்ந்தார். போலீசார் அங்கு சென்று, அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கோவைக்கு அழைத்து வந்த பின், அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் ஜூலை 24 வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டது.
டெய்லர் ராஜா, 1996ல் கோவையில் ஜெயிலர் பூபாலன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் 1997ல் சிறை அதிகாரி ஜெயபிரகாஷ் கொலை வழக்கிலும் தொடர்புடையவர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
